search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க வெளியுறவு மந்திரி"

    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) பாகிஸ்தான் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #USForeignMinister #Pakistan
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான்-அமெரிக்கா உறவில் லேசான விரிசல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தானை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப், அந்த நாட்டு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.



    பயங்கரவாதிகள் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நடந்து கொள்ளவில்லை என கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டிய டிரம்ப், வெறும் பொய்யும், ஏமாற்று நடவடிக்கைகளிலேயே அந்த நாடு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சாடினார். அத்துடன் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ நிதியுதவியை குறைக்க வகை செய்யும் மசோதா ஒன்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் இவ்வாறு விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் நேற்று முன்தினம் பதவியேற்று உள்ளார். அவர் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு முன்வந்துள்ளார். கடந்த மாதம் தனது வெற்றி உரையில்கூட இதை குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் அமெரிக்காவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக இம்ரான்கானின் பதவியேற்பை வரவேற்றுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானின் வளம் மற்றும் அமைதி மேம்பாட்டுக்காக புதிய ஜனநாயக அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக செய்தி வெளியிட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் பாகிஸ்தான் வருவதாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 5-ந்தேதி பாம்பியோவின் இஸ்லாமாபாத் பயணம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தான் வரும் மைக் பாம்பியோ புதிய பிரதமர் இம்ரான்கானை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ஆதரவு குறித்தும் மைக் பாம்பியோ பேசுவார் என கூறப்படுகிறது.

    இதன் மூலம் இம்ரான்கானை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற சிறப்பை மைக் பாம்பியோ பெறுகிறார். அவருடன் அமெரிக்காவின், தெற்கு ஆசியா விவகார துறைக்கான தலைவர் ஆலிஸ் வெல்ஸ் அடங்கிய உயர்மட்டக்குழுவினரும் பாகிஸ்தான் வருகின்றனர்.

    இதற்கிடையே பாகிஸ்தானின் புகழ்பெற்ற பஞ்சாப் மாகாண சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த மாகாண முதல்-மந்திரியாக உஸ்மான் பஸ்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  #USForeignMinister #Pakistan

    டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி இன்று பியாங்யாங் வந்துள்ளார்.
    பியாங்யாங்:

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.

    வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

    வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ இன்று பியாங்யாங் வந்துள்ளார்.



    வடகொரியா அதிபரின் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.

    முன்னதாக, அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட மைக் பாம்ப்பியோ, வரும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர். உலகத்துக்கு அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடகொரியா அதிபரை இந்த பயணத்தின்போது நான் வலியுறுத்துவேன்.

    இதற்கு வடகொரியாவும் தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகமாக சந்திப்பதன் மூலம் நட்புறவும், நம்பிக்கையும் பலப்படும் என்பதால் வடகொரியா தரப்பில் இருந்து உரிய எதிர்வினையை எதிர்பார்க்கிறேன் என பேட்டியின்போது மைக் பாம்ப்பியோ குறிப்பிட்டார். #PompeoinNKorea 
    ×